×

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

ஊழல் அனைத்து நாடுகளிலும் பரவிஉள்ளது. ஏழை, பணக்காரர், வடக்கு, தெற்கு என வித்தியாசமில்லாமல் உலகிற்கு பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழலை ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் டிச., 9ல், சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஊழலால் அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனம், மருத்துவமனை, கல்வி நிறுவனம், நீதித்துறை என அனைத்து இடங்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.

சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெறும் அவலம் நடக்கிறது. லஞ்சம் வாங்குவது எப்படி குற்றமோ, அதுபோல கொடுப்பதும் குற்றம். இதை தொழில் போல மாற்றி விட்டனர். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கும் அதிகாரிகள், மக்களிடமே லஞ்சத்தை எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம். லஞ்சத்தை தடுக்க சட்டம் இருந்தும், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. அரசியல்வாதிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வரிப்பணம் கொள்ளை போகிறது.

எப்படி தடுப்பது

ஊழலை தடுக்க முதலில் ஆள்பவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தண்டனைகளை அதிகரிக்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் மக்கள் மனங்களிலும் மாற்றம் வர வேண்டும். ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.

70

உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 70 லட்சம் கோடி லஞ்சமாக வழங்கப்படுகிறது. ஊழல் மூலம் ரூ. 183 லட்சம் கோடி கொள்ளையடிக்கப் படுகிறது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம்.

Tags : International Corruption Eradication Day
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்