சாலை மையத்தில் இருந்த தடுப்பு சுவரை அகற்றியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர்: கரூர் திருமாநிலையூர் முதல் சுக்காலியூர் வரை சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் அகற்றப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வழியாக மதுரை, கோவை, சேலம் போன்ற பிற மாவட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கரூர் நகரத்துக்குள் நுழையாத வகையில் திருமாநிலையூர் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை சந்திப்பு பகுதிகளான செல்லாண்டிபாளையம் சுக்காலியூர் வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் தடுப்புச் சுவர் காரணமாக விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சீராக சென்று வந்தன.

கடந்த சில ஆண்டுகளாக தடுப்புச் சுவர் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது திருமாநிலையூர் பகுதி முதல் சுக்காலியூர் வரை அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தடுப்புச் சுவர் உள்ள சமயத்தில் அதிக வேகத்தில் வாகனங்கள் சென்று வந்த நிலையில், இதனை கடந்து செல்ல அனைத்து தரப்பு மக்களும் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென தடுப்புச் சுவர் அகற்றப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினர்களும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.மேலும் இந்த சாலையில், கருப்பம்பாளையம், ராயனூர், ஒத்தையூர், சாலைப்புதூர், அமராவதி ஆறு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் சாலைகள் பிரிந்து செல்லும் நிலையில் தடுப்புச் சுவர் அகற்றம் காரணமாக அனைத்து வாகனங்களும் கட்டுப்பாடின்றி அதிக வேகத்துடன் சென்று வருகின்றன.காரணம் கூறாமல் திடீரென தடுப்புச் சுவர் எதற்காக அகற்றப்பட்டது என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து பார்வையிட்டு பொதுமக்களின் குழப்பத்தை போக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: