பிரபஞ்ச அழகி-2019 பட்டத்தினை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸோசிபினி துன்சி: மிஸ் சவுத் ஆஃப்ரிகாவாகவும் பட்டம் வென்றவர்!

அட்லான்டா: தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸோசிபினி துன்சி, 2019ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தினை தட்டிச்சென்றுள்ளார். பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு, அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தில் உள்ள டெய்லர் பெரி அரங்கில் நடைபெற்றது. முதல்கட்ட போட்டியில் 90 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பாரம்பரிய உடை, ஒய்யார நடை, கேள்வி பதில் உள்ளிட்ட பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நடுவர்களின் முடிவுகளின் அடிப்படையில் பிரபஞ்ச அழகி பட்டத்திற்கான போட்டிக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்றுள்ள வர்திகா சிங், வைல் கார்டு மூலம் டாப் 20 பட்டியலில் இடம்பிடித்தார். இதையடுத்து, டாப் 10 பட்டியலில் அமெரிக்கா, கொலம்பியா, போர்டோரிகா, தென்னாப்பிரிக்கா, பெரு, ஐஸ்லாந்து, பிரான்ஸ், இந்தோனேசியா, தாயாலாந்து, மெக்சிகோ அழகிகள் இடம்பிடித்தனர். பின்னர் நடைபெற்ற இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, போர்டோரிகா அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸோசிபினி துன்சி, 2019ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

பிரபஞ்ச அழகிக்கான 2வது இடத்தை போர்டோரிகாவை சேர்ந்த மேடிசன் ஆண்டர்சன் கைப்பற்றினார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ள 26 வயது துன்சி, நடப்பாண்டில் தான் தென்னாப்பிரிக்க அழகியாக பட்டம் சூட்டப்பட்டார். துன்சி, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு மேலாண்மை பாடத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். தென்னாப்பிரிக்காவிலிருந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது கறுப்பின பெண்மணி இவர். லீலா லோபஸ் என்பவர் 2011ம் ஆண்டு முதன் முதலாக பிரபஞ்ச அழகியான முதல் கருப்பினப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: