பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ₹. 75 கோடி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2 திட்டத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கியது. இதனால், இஸ்ரோ தனது திட்டத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. இதற்கான, சந்திரயான் -3 விண்கலத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசிடம் இஸ்ரோ கூடுதலாக ₹75 கோடி நிதி கோரி உள்ளது. ஏற்கனவே, 2019-20 பட்ஜெட்டில் இஸ்ரோவுக்கு ₹666 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 11 சதவீதமாக, கூடுதலாக ₹75 கோடி ஒதுக்கும்படி மத்திய அரசை இஸ்ரோ தற்போது கேட்டுள்ளது. இதில் இயந்திரங்கள், உபகரணங்கள், மூலதன செலவினங்களுக்காக ₹ 60 கோடியும், வருவாய் செலவினங்களின் கீழ் ₹15 கோடியும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உறுதியாக ஒதுக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கை இன்னும் முடியவில்லை எனவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஏற்கனவே மத்திய அரசு வழங்கியுள்ள ₹666 கோடியில், ₹ 8.6 கோடியை விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்துக்கு இஸ்ரோ ஒதுக்கியுள்ளது. மேலும், ₹12 கோடியை சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட்டுகளை தயாரிக்கவும், ₹.120 கோடி ஏவுதள மேம்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சதீஷ் தவான் விண்வெளி மையத்தை தொடர்ந்து, செயற்கைக் கோள்களை வடிவமைத்து பரிசோதிக்கும் யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் அதிகளவு கூடுதல் மூலதன நிதி கோரியுள்ளது. இரண்டும் சேர்ந்து ₹516 கோடி நிதி கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.