பீகாரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை சாக்லெட், கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: பீகாரில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதை சாக்லெட், கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகாரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அதில் வந்த 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த ரயில்வே போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 25 கிராம் கொண்ட 10 பாக்கெட் கஞ்சா, 50 பாக்கெட் ஜர்தா புகையிலை, 200 போதை சாக்லெட் ஆகியவை இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் பீகாரை சேர்ந்த ஜன்வாஸ் வர்சாடி (35), பாபுகுமார் (19) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.

அவர்களை பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில்,  இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.4 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வடசென்னையில் மாணவர்கள், தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த வண்ணாரப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் (35), கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரத்தை சேர்ந்த அருள் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.} திருவொற்றியூர் திலகர் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி, விற்பனை செய்து வந்த தமிழரசன் (20), கமலகண்ணன் (30), ராஜேஷ் (32), பிரபாகரன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: