தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ‘‘மெப்ஸ்’’ வளாகம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சாலையில் சேதம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியுள்ளது.அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஓடும் தண்ணீரில் வழுக்கி விழும் அபாயம் ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் இருதரப்பினர் இடையே புகார் அளித்தும் அவர்கள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர் என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘சானடோரியம் ஜிஎஸ்டி சாலையை தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், மெட்ரோ நிர்வாகத்தின் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனை மெட்ரோ நிர்வாகம் சரியாக சரி செய்யாமல் ஏனோதானோ என மாதத்திற்கு ஒருமுறை சரி செய்வதால் மீண்டும், மீண்டும் அங்கு உடைப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் கேட்டால் உடைந்த குழாயை நாங்கள் சரி செய்கிறோம். ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை அதன் மீது சாலையை முறையாக போடாததால் வாகனங்கள் செல்லும்போது குழாய் சேதமடைந்து அதில் உடைப்பு ஏற்படுகிறது.