கால்வாயில் கார் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை பலி

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை, முக்கம்பாலவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ்(30). இவர் தேன் பெட்டி தயாரிப்பு மற்றும் மார்பிள் வேலைக்கு செல்வது வழக்கம். இவரது மனைவி மஞ்சு(26), ஒன்றரை வயது மகன் அமர்நாத். வேலைக்காக கேரளா சென்றிருந்த  அனிஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இதனையடுத்து மனைவி, குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மதியம் மனைவி, குழந்தையுடன் தனது காரில் அழைத்துக்கொண்டு குலசேகரம் சென்று கடைகளில்  பொருட்கள் வாங்கியுள்ளனர்.

பின்னர் காரில் அஞ்சுகண்டறை பகுதிக்கு திரும்பியுள்ளனர். கார் குலசேகரம்-திருநந்திக்கரை சாலையில் இருந்து அஞ்சுகண்டறை செல்வதற்கு கோதையாறு இடதுகரை கால்வாய் கரையில் வந்துகொண்டிருந்தபோது கயக்குண்டு என்ற இடத்தில் திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காவாயில் தண்ணீர் பெருமளவு சென்றுகொண்டிருந்தது. மேலும் கார் விழுந்த சப்தம் கேட்டு  பொதுமக்கள் ஓடிவந்தனர். பின்னர் கண்ணாடியை உடைத்து 3 பேரையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து, குலசேகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: