நெல்லை: பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் இன்று முதல் தமிழகம் முழுவதும் மண்டல அளவில் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும் உள்ளன. இதில் 32 முதன்மைக்கல்வி அலுவலர்கள், 117 மாவட்ட கல்வி அலுவலர்கள், 413 வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு மேல் இயக்குனர்கள் மற்றும் ஐஏஎஸ் அந்தஸ்தில் முதன்மை செயலாளர் உள்ளனர். பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டார். இவர், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக சென்று கல்வித்தர மேம்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளார். இன்று (9ம் தேதி) முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில் அந்தந்த மண்டல முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 20 தலைமையாசிரியர்கள், 20 ஆசிரியர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.