சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு விளைநிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. பத்திர பதிவு மூலம் வருவாய் குறைந்ததை அடுத்து கடந்த 2017ல் 30 சதவீதம் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் முறையும் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக பத்திரப் பதிவுத்துறையில் கடந்தாண்டு ₹11 ஆயிரம் கோடி வருவாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு ₹13,123 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பதிவுத்துறை ஐஜி ஜோதிநிர்மலாசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓவ்வொரு மண்டலத்திலும் வருவாய் குறைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.