×

உள்நோக்கத்துடன் செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்தித்து புதிய சரித்திரம் படைப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்தித்து புதியதொரு  சரித்திரம் படைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, கனிமொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் “சரணாகதி” செய்து விட்டு-முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக-உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணி வகுக்க வைத்து  ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

இந்நிலையில் 18.11.2019 அன்று “டிசம்பர் 13ம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்று உச்ச நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும்; “நேரடித் தேர்தலுக்குப்  பதில் மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம்”, “9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இட ஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது”, “ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல்”, என்றெல்லாம் அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின.ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தை திமுக அணுகியது. அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்ற வழங்கியுள்ளது.

மூன்று வருடங்களுக்கும் மேலான திமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது எனவும், உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து - திமுக மீது “போலி குற்றச்சாட்டினை” முன்வைத்து பொய்ப் பிரசாரம் செய்யும் அதிமுக அரசுக்குத் தக்க பாடம் கற்பித்துள்ள தீர்ப்பு.
 வார்டு மறுவரையறை-பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட விதிமுறைப்படி செய்ய வேண்டும்;  புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், 7ம் தேதிசட்டத்திற்குப் புறம்பாக,  புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாகச் செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தையும் செய்த அதிமுக அரசின் முதல்வரும்- அமைச்சர்களும், தாம் செய்த குற்றத்தை மற்றவர் தலையில் சுமத்தித் தப்பித்திடும் தீய நோக்கத்துடன், “உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுக காரணம்” என்று செய்யும் கடைந்தெடுத்த  பொய்ப் பிரச்சாரத்திற்கும்; கடந்த  6ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் எப்படியாவது தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடனும், அலட்சிய மனப்பான்மையுடனும், 7ம் தேதி(நேற்று முன்தினம்) தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கும்; இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல், தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி, வாய்ப்பூட்டு போடப்பட்டு,  அல்லல்களுக்கு ஆளாகிவரும் தமிழக மக்கள், திமுக பக்கம் உறுதியாக நின்று பேராதரவினை நல்கிடுவார்கள்.  எனவே உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும்;  “ மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே “ என்ற மகத்தான நம்பிக்கையுடன்,  தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது என்று இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

Tags : election ,MK Stalin ,DMK ,meeting , local election comes, create , new history, DMK leader MK Stalin
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...