சென்னை: சோழவரம் அருகே புதையல் இருப்பதாக ஜோசியர் கூறியதால், தன் வீட்டில் ஐஸ் வியாபாரி ஒருவர் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினார். இது குறித்து தகவலின் பேரில் வருவாய் துறையினர் எச்சரித்ததால் பள்ளத்தை மண் போட்டு மூடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சோழவரம் அருகே கும்மனூர், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புதையல் எடுப்பதற்காக 25 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் விஏஓ அரிகிருஷ்ணன், ஞாயிறு பகுதி வருவாய் துறை அலுவலர் விமலா மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஐஸ் வியாபாரி மோகன் (62) என்பவரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு வீட்டுக்குள் சுமார் 20 அடிக்கு மேல் 3 அடி அகலத்தில் ஒரு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.