சென்னை: புவி கண்காணிப்பிற்காக ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் மூலம் நாளை மறுநாள் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, புவி கண்காணிப்பிற்காக அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைக்கோளை கடந்த மாதம் 27ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதனுடன் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், புவி கண்காணிப்பிற்கு உதவும் ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோளை ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மறுநாள் மதியம் 3.25 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.