இனி யார் தப்பு செய்தாலும் என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா அமைச்சரின் எச்சரிக்கை

தெலங்கானா: தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியுள்ள அம்மாநில மூத்த அமைச்சர் ஒருவர் இனி யார் தப்பு செய்தாலும் என்கவுன்ட்டர் தான் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தெலங்கானா மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளூர் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், இது ஒரு பாடம் இனி நீங்கள் யாரேனும் தவறு செய்தால் நீதிமன்ற விசாரணையால் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்க முடியாது.

சிறை செல்லவும் பின் பிணையில் வெளியில் வந்து வழக்கை இழுத்தடிக்கவும் முடியாது. அது போன்று இனி எதுவும் வேலையும் நடக்காது. இந்த என்கவுன்ட்டர் மூலம் கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர் தான் என்ற எச்சரிக்கை கருத்தை நாங்கள் அனுப்பியுள்ளோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தெலங்கானா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இந்த செயலாகும். வெறும் நலத்திட்டங்கள் மூலம் மட்டும் நாங்கள் முன்மாதிரியாக நிற்கவில்லை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் ஏற்படுத்தியுள்ள இத்தகைய நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாக இருக்கிறோம் என அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் கூறினார்.

முன்னதாக மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சரும் என்கவுன்ட்டரை ஆதரித்துப் பேசியிருந்தார். இனி பெண்கள் மீது மோசமான பார்வையைக் கடத்துபவர்களின் கண்கள் பிடுங்கி எரியப்படும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் வெள்ளிக்கிழமை அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு பாராட்டும் எதிர்ப்பும் கலவையாக வருகிறது. சட்டத்தை மதிக்காமல் காவல்துறை துப்பாக்கியால் தீர்ப்பு எழுதுவது சரியா என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Related Stories: