டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டெல்லி: டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி ராணி ஜான்சி சாலை, அனஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை  5.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, தீ அருகில் உள்ள கடைகளில் பரவியது. மின்சாரம் தொடர்பான பாதிப்பினால், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ விபத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் எல்என்ஜேபி, ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சுமார் 50 பேர்  அனுமதிக்கப்பட்ட நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை  சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில்  உயிரிழந்தவர்கள் குடும்பத்தனருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்:

டெல்லியின் அனஜ் மண்டியில் தீ பற்றிய சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்களுக்கு விரைவாக குணமடைய  விரும்புகிறேன். மக்களை மீட்பதற்கும் உதவி வழங்குவதற்கும் உள்ளூர் அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்:

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராணி ஜான்சி சாலையில் டெல்லியின் அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ மிகவும் கொடூரமானது. என் எண்ணங்கள் தங்கள்  அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன். சோகம் நடந்த இடத்தில் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா இரங்கல்:

டெல்லி தீவிபத்தில் விலைமதிப்பில்லாத உயிர்கள் பறிபோனது சோகமானது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன். அனைத்து உதவிகளையும்  உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால்:

சோகமான செய்தி. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு வீரர்கள், சிறப்பானபணியை செய்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: