டெல்லி: டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி அனஜ் மண்டி பகுதியில் உள்ள மார்கெட்டில் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, தீ அருகில் உள்ள கடைகளில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரம் தொடர்பான பாதிப்பினால், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.