சேலம்: கர்நாடகாவில் 25 லட்சம் கடத்தல் குட்காவை வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய வியாபாரியை, துப்பாக்கி முனையில் காரில் ஏற்றிச் சென்றதால் அவர் கடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரீஷ்தேவாஜி(30). இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டையில், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை தனது உறவினர் தோலாராம்(28) என்பவருடன், சுந்தர் லாட்ஜ் பகுதி கடையில், டீ குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது 2 சொகுசு கார்களில் வந்த 4 பேர், துப்பாக்கியுடன் அதிரடியாக கடைக்குள் நுழைந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் ஹரீஷ் தேவாஜியை காரில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் கருப்பூர் அரபிக் கல்லூரி அருகே அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் கர்நாடக மாநில போலீசார் என கூறி அதற்கான அடையாள அட்டைகளை காட்டினர். இதையடுத்து, போலீசார் அவர்களை கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ‘கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 25 லட்சம் மதிப்பிலான கடத்தல் குட்காவை, ஹரீஷ்தேவாஜி வாங்கியது குறித்து பெங்களூரு போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்ததும், இதுதொடர்பாக, நேற்று ஹரீஷ் தேவாஜியிடம் விசாரிக்க சேலத்திற்கு வந்த பெங்களூரூ போலீசார் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்றனர்.