புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே நள்ளிரவு வெங்காய மூட்டைகளை திருடிய ஆசாமியை கையும் களவுமாக பிடித்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவரை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, நேருவீதியில் பெரிய மார்க்கெட் (குபேர் அங்காடி) உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான காய்கறி, பழங்கள், மளிகை, அலங்கார பொருட்கள், பூக்கடைகள் உள்ளன. இதையொட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியிலும் மொத்த காய்கறி விற்பனை அங்காடிகள் இயங்கி வருகின்றன. இங்கு வேல்முருகன் மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரில் இருந்து அவரது கடைக்கு வந்த வெங்காய லோடுகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி, 50 கிலோ எடை கொண்ட 5 ஆயிரம் மதிப்புள்ள வெங்காய மூட்டை ஒன்றை திருடி எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள், புதிய நபர் வெங்காய மூட்டையை கடத்தி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடிவந்து அந்த மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.