சென்னை: உயர் அழுத்த மின்பயனீட்டாளர்கள், தங்களது மாதாந்திர மின்கட்டணத்தை செலுத்துவதற்கான தேதியில், வாரியம் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 111 கே.விக்கு மேல் மின் பழு வாங்கினால், அது உயரழுத்த மின்சார இணைப்பு என அழைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பிரிவில் இணைப்புகளை பெற்றிருப்போர், வாரியத்திற்கு கட்டணம் செலுத்துவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் அழுத்த மின்இணைப்புகளுக்கு தற்போது மொத்த மின் பயனீட்டு நாட்கள் 31 ல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி ரீடிங் எடுக்கப்படும். இதற்கான தொகையை பயனீட்டாளர்கள், அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதேபோல் ஒரு கே.விக்கான மாதாந்திர நிரந்தர மின்கட்டணம் ரூ.395 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.