ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வாக்குறுதியை மீறிய மத்திய பாஜ அரசு மீது வழக்கு தொடர வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பாஜக அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி  தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:“சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளதை,  அதிமுக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சராகவும்-துணை முதல்வராகவும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜி.எஸ்.டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன் வைத்தன. திமுகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது.  அப்போது, “ஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்” என்று மத்திய பாஜக அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக  நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி.அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற “ஜி.எஸ்.டி சட்ட துவக்க  விழா”விற்கு அன்றைய  நிதியமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த மறுநாள், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வரி விதிப்பு முறை” என்று அதிமுக அரசு செய்திக் குறிப்பே வெளியிட்டு  மகிழ்ச்சியடைந்தது.ஜி.எஸ்.டி சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்பு வைத்து நிறைவேற்ற முனையும்போது-அதிமுக எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சி  தலைவர் என்ற முறையில் விளக்கிக்  கூறி-“வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசரகோலத்தில் நிறைவேற்ற வேண்டாம். தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு,  அன்றைக்கு ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு அதிமுக அரசு ஒப்புதல் அளித்தது.

ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அதிமுக அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார்  5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தத் தொகை பெறப்பட்டதா?. ஜி.எஸ்.டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?. அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து  பெற்றது எவ்வளவு?. நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? - எது பற்றியும் அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது!தற்போது, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டு  தொகையை விடுவிக்கக் கோரியும் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பாஜக அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது  என்ற பயமோ என்னவோ. எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதல்வர் பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.“ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசிமுறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி  தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக சரணாகதி செய்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆகவே, ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு, வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு  என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதல்வரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும்.

ஏற்கனவே அதிமுக ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து  97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து - கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற  உள்நோக்கத்துடன், முதல்வரும்- துணை முதல்வரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பாஜ அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும்-ஜி.எஸ்.டி  இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதில் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்னைகளை ஏற்படுத்திவிடும் என்று  எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, தமிழகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

Related Stories: