டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஹெச்.டி. தலைமை உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில், “ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் பொதுத் துறை வங்கிகள் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளன. உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீட்டைப் பெருக்குவது உள்ளிட்ட பணிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்துகிறது” என்றார்.