நீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

ஜெய்ப்பூர்: நீதி வழங்குவதில் அவசரம் காட்ட முடியாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரை, தங்களை தாக்க முயன்றதால் போலீசார் நேற்று காலை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்டர் பலரிடமும் வரவேற்பையும், சிலரிடம் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த என்கவுன்டர் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், நீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது. நீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அப்படி அது பழிதீர்ப்பதாக அமைந்து விட்டால், நீதி தனது உண்மையான தன்மையை இழந்து விடும் என தெரிவித்துள்ளார். வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர நீதி அமைப்பில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் மத்தியஸ்தம் போன்ற மாற்று முறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது.

நீதி அமைப்பில் உள்ள தாமதங்கள் வழக்குத் தொடுப்பவர்களுக்கு ஒரு தடையாகக் காணப்படுகின்றன. நீதித்துறை மற்றும் வழக்கு பற்றிய மாறிவரும் கருத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். வழக்கு முடிவதற்கு எடுக்கப்பட்ட கால அளவு ஒரு பெரிய தடையாகும என்றும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ஐகோர்ட்டில் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். இவ்விழாவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தும் கலந்து கொண்டிருந்தார்.

Related Stories: