காரியாபட்டி: காரியாபட்டி அருகே, நான்குவழிச்சாலையில் உள்ள ஆவியூரில் சர்வீஸ் சாலை இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி அருகே, மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் ஆவியூர் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சுற்றி அரசகுளம், குரண்டி, மாங்குளம், கீழ உப்பிலிக்குண்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை நகரங்களுக்கு செல்ல, ஆவியூருக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஊரில் உள்ள காவல்நிலையம் வடபுறத்தில் உள்ளதால், அங்கு செல்வோர் எதிரெதிர் திசையில் சென்று விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், மதுரை செல்லும் பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன. சில சமயங்களில் வேகமாக பின்னால் வரும் வாகனங்கள் இடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. போக்குவரத்தை சீரமைக்க பேரிகார்டுகள் வைத்துள்ளனர். இருப்பினும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.