தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தெலங்கானா: தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை என்கவுன்ட்டர் செய்தது தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் லாரி ஓட்டுநர்கள் முகமது ஆரிப், சென்னகேசவலு, கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைதான 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

பின்னர், கொலை எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டுவதற்காக 4 பேரையும் பெண் மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது காவல்துறை. அப்போது தப்பியோட முயன்ற 4 பேரும் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகவும் தற்காப்புக்காக 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார். இந்நிலையில்நான்கு  பேர் என்கவுண்டர் செய்தது தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: