மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை

புதுடெல்லி: மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். நிறுவன உரிமை தொகை, அலைக்கற்றை பயன்பாட்டிற்கான கட்டணம் என வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.53 ஆயிரம் கோடியை உடனே செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் 4-வது காலாண்டில் மட்டும் சுமார் ரூ.51 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை என்று வோடபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா கூறியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடித்தளமாக விளங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். பொருளாதார சரிவை மீட்டெடுக்க அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று குமாரமங்கலம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: