வெற்று காசோலையில் கையெழுத்து பெற்று கார்பென்டரிடம் 8 லட்சம் அபேஸ்

பெரம்பூர்: அயனாவரம் பட்டாச்சாரியா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (60).  இவர் ஐ.சி.எப்.பில் கார்பென்டர் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன் வியாசர்பாடி  சஞ்சய் தெருவைச் சேர்ந்த  ஐசிஎப் ஊழியர் கமலநாதன் (57) மற்றும் அவரது மனைவியிடம் ₹3 லட்சம் கடன் பெற்றுள்ளார். 10 சதவீத வட்டிக்கு வாங்கிய  கடனுக்கு ஜாமீனாக தனது  வங்கி ஏடிஎம் அட்டை மற்றும் காசோலையை  கொடுத்துள்ளார். சம்பளம் பணம் வங்கியில் வந்ததும் கமலநாதன் வட்டி தொகை 30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை கிருபாகரனிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் 10 வருடமாக மாதம் 30 ஆயிரம் வட்டி கொடுத்து வந்த கிருபாகரன், 27 லட்சம் வரை வட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன்  ஓய்வு  பணத்தில் ₹3 லட்சம் அசலை செட்டில் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு வங்கியில் இருந்து பென்ஷன் தொகை 8 லட்சம் குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த கிருபாகரன் இதுகுறித்து வங்கியில் விசாரித்ததில், கமலநாதன் என்பவர் காசோலை மூலம் 8 லட்சம் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிருபாகரன் கமலநாதன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார் ஏற்கனவே தரவேண்டிய வட்டியில் பாக்கி இருந்ததாக கூறி கமலநாதன் மற்றும் அவரது மனைவி அமுல் ஆகியோர் கிருபாகரனை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருபாகரன் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.   விசாரணையில் கமலநாதன் 8 லட்சம் ரூபாயை கிருபாகரன்  வங்கியில் இருந்து எடுத்தது உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் கமலநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் உடந்தையாக இருந்த கமலநாதனின் மனைவி அமுல் (45) என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: