புழல்: செங்குன்றம் அருகே காலி இடத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஏரியின் பின்புறம், லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோயில் அருகே சுமார் 50 சென்ட் இடத்தில் கடந்த ஒரு வாரமாக அவசர கதியில் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த 7 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். சுமார் 70 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட 3 பக்க சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஈரம் காயாத நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் 4வது பக்க சுவர் கட்டும் பணியில் 7 கட்டிட கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரம் காயாத நிலையில் இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பணியில் இருந்த பொத்தூரை சேர்ந்த லோகநாதன் (50), வள்ளிவேலன் நகரை சேர்ந்த லலிதா (50), செல்லப்பன் (47), தேவராஜ் (65), குமார் (45), எல்லம்மன்பேட்டையை சேர்ந்த பாபு (45), செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த முத்து (40) ஆகிய 7 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.