சென்னை: ரயில் நிலையங்களில் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பயணிகள் நலவாரிய தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் கூறினார்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் பயணிகள் வசதி நல வாரிய தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் மனோஜ் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து ரயில் நிலையங்களில் இருந்த பயணிகளிடம் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போதுமானதாக உள்ளதா என்று கேட்டறிந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும், ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.