வீட்டுக்கடன் திட்டத்தில் கையாடல் தாசில்தார் உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி கோட்டத்தில் கடந்த 1994/95, 95/96ம் ஆண்டுகளில் அப்பகுதியில் வசித்து வந்த இலங்கை அகதிகளுக்கு வீட்டுக்கடன் மற்றும் தொழில் கடன் வழங்குவது தொடர்பாக அப்போது பணிபுரிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி தாசில்தார் தலைமையிடத்து துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரால் முறைகேடாக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அரசு நிதியில் இருந்து ₹50 லட்சத்து 58 ஆயிரம் கையாடல் செய்தது தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொண்டு 13 நபர்கள் மீது கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2003ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இறுதிகட்ட விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி திருவேங்கட னிவாசன் தீர்ப்பளித்தார். இதில் திட்டக்குடி முன்னாள் தாசில்தார் வீரச்செல்லையா, முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் பிச்சைபிள்ளை, விருத்தாசலம் தலைமையிடத்து துணை தாசில்தார் கோயில்பிள்ளை மற்றும் சதாசிவம் உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: