சென்னை: தீபாவளியன்று, மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் சென்னையில் எத்தனை இடத்தில் கண்காணிப்பு கருவியை பொருத்தி இருந்தது என்று மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் பேசியதாவது: மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் தீபாவளி காலத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டறிய சென்னையின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியிருந்ததா, அவ்வாறெனில், எந்தெந்த இடங்களில் எத்தனை கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக பசுமை வெடிகளின் பயன்பாட்டை உறுதி செய்யவும், அதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் இருப்பதற்கும், அதேநேரத்தில் உள்நாட்டுப் பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் எத்தகை நடவடிக்கைகள் இந்த அரசு மேற்கொண்டுள்ளது? இவ்வாறு அவர் பேசினார்.