திருவனந்தபுரம்: ‘சபரிமலையில் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை உயர்த்த உத்தரவிட முடியாது,’ என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்காக கடந்த 16ம் தேதி நடை திறந்து பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இளம் பெண்கள் தரிசனத்துக்கு சென்றதால் ஏற்பட்ட பதற்றத்தால் பக்தர்களின் வருகை குறைந்தது. இந்த ஆண்டு அமைதியான சூழல் நிலவுவதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் ஏராளமான ஓட்டல்கள், கடைகள் உள்ளன. இங்கு விற்கப்படும் உணவு பொருட்களின் விலை ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு பொருட்களை விற்கக் கூடாது என தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது. சில கடைகளில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக புகார்கள் வந்துள்ளன.