திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து இறந்த மாணவியின் பெற்றோரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்,
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த மாணவியான ஷஹ்லா ஷெரின் வகுப்பறையில் பாம்பு கடித்து இறந்தார்.இது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், வகுப்பு ஆசிரியர் மற்றும் உடனடியாக சிகிச்சை அளிக்காத சுல்தான்பத்தேரி அரசு மருத்துவமனை டாக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவி ஷெரினின் பெற்றோருக்கு 10 லட்சம் நிவாரண உதவி வழங்க கேரள அரசு நேற்று தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தனது வயநாடு மக்களவை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பி.யுமான ராகுல் காந்தி, மாணவியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.