×

தமிழக மாநில தேர்தல் ஆணையம் திறமையற்றது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், கோபண்ணா, சிரஞ்சீவி, இரா.மனோகர், தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், தணிகாசலம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் செல்வம், நாஞ்சில் பிரசாத், ஜான்சிராணி, சுமதி அன்பரசு, மலர்கொடி, எஸ்.கே.நவாஸ், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையம் ஒரு குழப்பமான, திறமையற்ற ஆணையம்.

அதற்கு காரணம், அதிமுகவுக்கு வேண்டிய ஒருவர் தேர்தல் ஆணையராக வரவேண்டும் என்று கருதி திறமையற்ற ஒருவரை நியமித்ததுதான். உள்ளாட்சி தேர்தலையே இரண்டு கட்டமாக நடத்துவது என முடிவு செய்து, இடஒதுக்கீட்டை சரியாக கணக்கிடாமல் இன்றைக்கு நீதிமன்றத்திலே போய் அதிமுக அரசு குட்டு வாங்கியுள்ளது. தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய தலைக்குனிவு. இது தவறான ஒரு முயற்சி. எனவே, நேர்மையான, திறமையான ஒருவரை தேர்தல் ஆணையராக தமிழக அரசு நியமிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொள்ளாச்சி விவகாரத்தை ஆளுங்கட்சி அடக்கி வாசிப்பது ஏன்?
மேலும், கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‘தெலங்கானா, டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார விவகாரத்தில் அரசியல் கிடையாது. அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த ரவுடிகள் அந்த தவறை செய்துள்ளனர். ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் இருக்கிறது. ஆளுங்கட்சியின் கைவரிசை அதில் இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு மிகவும் நெருக்கமான குடும்பங்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே பொள்ளாச்சி விஷயத்தை அடக்கி வாசிக்கிறார்கள்’ என்றார்.

Tags : Tamil Nadu State Election Commission ,KS Alagiri , Tamil Nadu, State Election Commission, KS Alagiri
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...