தொடர் விபத்துகளை தடுக்க நடவடிக்கை கால் டாக்சி டிரைவர்கள் சாலை விதியை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்: போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் கால் டாக்சி டிரைவர்களுக்கு துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொடர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் வகையில் பல சிறப்பு திட்டங்களை மாநகர போக்குவரத்து காவல் துறை எடுத்து வருகிறது. குறிப்பாக போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன்  உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்தி சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்ததில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் விபத்து எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில் மண்டல வாரியாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கால் டாக்சி டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தி.நகர் காவல் மாவட்டத்தில் பிரபல 4 கால் டாக்சி நிறுவனங்களை ேசர்ந்த கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுடன் தி.நகரில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. போக்குவரத்து துணை கமிஷனர் மயில்வாகனம் தலைமையில் நடந்த கூட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட கால் டாக்சி டிரைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கால் டாக்சி டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க ேவண்டும். சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மீது போக்குவரத்து விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் எச்சரிச்சை விடுக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் போக்குரவத்து உதவி கமிஷனர் ஸ்டீபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: