பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் பகலில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் பகலில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புலிகள் காப்பக வனப்பகுதியில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையை, யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுகிறது.

இந்த யானை அவ்வப்போது சாலையின் நடுவே நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். நேற்று காலை 11 மணியளவில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள வனப்பகுதியில் திம்பம் மலை அடிவாரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அருகே ஒற்றை யானை சாலையின் நடுவே நின்றுகொண்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானை அருகே வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றபின் வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர்.

Related Stories: