×

சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பொன் மாணிக்கவேல் தனது தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

வழக்கின் பிண்ணனி


*சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

*இதே போல், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் கடந்த 30 தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவரின் பதவி காலத்தை  நீட்டிக்க உத்தரவிட கோரி பொன்மாணிக்கவேல் மற்றும் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வாதம்

*அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக மீண்டும் பொன்.மாணிக்கவேலை நியமிக்க கோரி தான் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என் யானை ராஜேந்திரன் முறையிட்டார்.

*இதைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால்,  இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்ககூடாது என வாதிட்டார்.

*அத்துடன் பொன்.மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்பட்டார் எனவும், அரசுக்கு இதுவரை எந்த  ஒத்துழைப்பு தந்ததில்லை எனவும் குற்றம் அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். ஏற்கனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அவரை மறு நியமனம் செய்ய முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

ஆவணங்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை  இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து,  பொன்.மாணிக்கவேல் தனது  தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை   தள்ளி வைத்தனர்.

Tags : Chennai High Court ,gold ministries ,idolatry investigation ,Government of Tamil Nadu ,Abduction , Government of Tamil Nadu, Advocate, High Court, Advice, Idolization, Goldsmiths
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...