சென்னை மெரினாவில் நுரை பொங்கிய விவகாரம்: ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: : மெரினா கடலில் ஏற்பட்டுள்ள நுரை மாசுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அப்போது திடீரென மெரினா கடற்கரையில் இரண்டு அடி உயரத்திற்கும் மேல் நுரை அதிகரித்துக் காணப்பட்டது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் தொடங்கி பெசன்நகர், திருவான்மியூர் வரை கடற்கரையில் காணப்பட்டது. திடீரென நுரை பொங்கியதற்கு காரணம் தெரியாமல் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கு விளக்கமளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்று காலை பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் தேங்கி இருந்த நுரையை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த ஆய்வில், சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. மேலும் ஒரே நேரத்தில் மழை மற்றும் ரசாயனம் கலந்த கழிவுநீர் கடலில் கலந்ததால் தான் நுரை பொங்கியது என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 3 நாட்களாக வங்கக்கடலில் நிலவியிருந்தது. அதன் காரணமாக அதிக அலைகள் உருவான நிலையில் ரசாயன நீர் அதனுடன் கலந்ததே நுரைக்கு காரணம் என விளக்கமளித்துள்ளனர். இந்த திடீர் நுரையின் காரணமாக சமூக வலைதளங்கள் மூலம் பார்த்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்காக பதிவு செய்துள்ளது. பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.  அதில்; மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவை உடனடியாக இந்த மாசு நுரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதனால் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ஆராய்ந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறியாகி தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவாகும்.

Related Stories: