×

காரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250 பவுன் கொள்ளை வழக்கில் இலங்கை அகதிகள் 3 பேர் கைது


* தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலம்
* 3 மாதத்திற்கு ஒரு முறை ஊரை மாற்றி அட்டகாசம்

காரைக்குடி: காரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இலங்கை அகதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேர்முட்டி வீதியை சேர்ந்தவர் இளங்கோமணி. ஜவுளிக்கடை அதிபர். கடந்த மாதம் 15ம் தேதி இவரது வீட்டை உடைத்து 250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டிற்கு முன்பு ஒரு கார் நின்றது, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கொள்ளை தொடர்பாக மதுரை ஆனையூர் மற்றும் திருப்பத்தூர், தெம்மாபட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த சதீஷ், அன்புகுமார், சிவராஜன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 பவுனுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் கூறுகையில், ‘‘கைதான மூவரும் கடந்த 2006ல் ஆனையூர் மற்றும் தெம்மாபட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துள்ளனர். அதன்பிறகு இவர்கள் சம்பந்தமான பதிவுகள் அங்கு இல்லை. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் 3 மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் வீட்டை மாற்றி வந்துள்ளனர். அவினாசி, கரூர், கோவை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவினாசியில் மட்டும் பல்வேறு வழங்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. கார், டூவீலர் உள்பட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15ம் தேதி காரைக்குடி வந்த இவர்கள் இளங்கோமணியின் வீடு பூட்டி இருப்பதை காலையில் பார்த்துள்ளனர். இரவு வந்து பார்த்தபோதும் பூட்டி இருந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நீடிக்கிறது’’ என்றனர்.


Tags : refugees ,Sri Lankan ,robbery ,house robbery president ,Karaikudi 250 , Sri Lankan refugee arrested for robbery
× RELATED எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது...