மேயர் பதவிக்கு அவசர சட்டம் எதிர்த்து வழக்கு ஐகோர்ட் கிளையில் விசாரணை தள்ளிவைப்பு

மதுரை:  தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தேர்தலின்றி மறைமுகமாக தேர்வு செய்திடும் வகையில் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.    இதை எதிர்த்து மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த வக்கீல் முகம்மது ரஸ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அதில், ‘‘மறைமுகமாக தேர்தல் நடத்துவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதனால் குதிரை பேரம் நடக்கும். எனவே, தமிழக அரசின் அவசர சட்டம் செல்லாது என்றும், தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘இதுதொடர்பான வழக்கு இன்று (நேற்று) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதைப்பொறுத்தே முடிவு இருக்கும். எனவே, இந்த வழக்கில் கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து, மனு மீதான விசாரணையை டிச. 19க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: