நாகை: சூடான் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நாகையை சேர்ந்த இன்ஜினியர் இறந்ததாக தகவல் வந்தது. ஆனால், அவர் தீவிபத்துக்கு முன்பே வெளியேறும் வீடியோ காட்சி வந்துள்ளது. இதை காண்பித்து மகனை மீட்டு தர வேண்டும் என்று பெற்றோர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். சூடான் தலைநகர் கார்டோவில் பாஹ்ரி என்ற இடத்தில் சாலுமி என்ற செராமிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் காஸ்சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் நாகை மாவட்டம் ஆலங்குடிச்சேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் இறந்ததாக அவர்களது குடும்பத்தினருக்கு நேற்றுமுன்தினம் இரவு தகவல் வந்தது. இதையடுத்து அவர்களது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது.