புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2ம் தேதி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், “சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த பொன்.மாணிக்கவேல் அது தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கை ஆகியவற்றை துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிலைக் கடத்தல் பிரிவின் புதிய ஐ.ஜியாக ஐபிஎஸ் அதிகாரி அன்புவை நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.