ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட 15 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறை ஒப்புதல்: பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட 15 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பிய கேள்வி:  காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு திட்டம் வகுத்து இருக்கிறது. அதற்காக, மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.  அந்த கிணறுகளை தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா, அவ்வாறு தோண்டுகிற இடம், விளை நிலங்களா, அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன, ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா, திட்டம் கைவிடப்படுமா?

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்: காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு திட்டம் வகுத்துள்ளது. மொத்த நில பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 15 கிணறுகள், விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர். அந்த பிரச்னைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்படும். சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்.

Related Stories: