வழக்கில் சிக்கிய லாரியிலிருந்து பேட்டரியை திருடும் எஸ்.ஐ

சென்னை: திருக்கழுக்குன்றத்தில் வழக்கு தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் இருந்து போட்டரியை எஸ்.ஐ திருடுவது போன்ற காட்சிகள் சமூவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பாலாற்றில் மணல் திருடிய ஒரு லாரியை கடந்த 3ம் தேதி திருக்கழுக்குன்றம் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரியை காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள கிரிவலப் பாதை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், அன்று இரவே (3ம்தேதி)  திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ.கார்த்திகேயன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் (போலீஸ் நண்பர்கள்) முருகன் ஆகியோர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சென்று  மணல் திருட்டில் சிக்கிய லாரியிலிருந்து பேட்டரியை திருடி எடுத்துச் சென்று அவர்கள் தயாராக கொண்டு வந்த ஒரு காரில் வைப்பது போன்ற சிசிடிவி காட்சியும், அதேப்போல் ஒரு பெரிய கேனை எடுத்துக் கொண்டு டீசல் எடுக்க செல்லும் காட்சியும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.                

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் சம்மந்தப்பட்ட எஸ்.ஐ.கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தி எஸ்.ஐ. கார்த்திகேயனை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார். வழக்கில் உள்ள லாரியிலிருந்து வேறு யாராவது பேட்டரியை திருடிச் சென்று விடாமல் இருப்பதற்காக தான் பேட்டரியை எடுத்துச் சென்றதாக எஸ்.ஐ.கார்த்திகேயன் கூறியதாக தெரிகிறது.  அப்படியென்றாலும் கூட பேட்டரியை பகலில் எடுக்காமல் இரவில் எடுக்க  காரணமென்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  கேனை எடுத்துக் கொண்டு செல்ல காரணமென்ன மேலும் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் வந்து எடுக்க காரணமென்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: