சென்னை: அடையாறு முகத்துவாரத்தில் பட்டினப்பாக்கம் அருகே கடந்த 29ம் தேதி முதல் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கடற்கரையோரத்தின் இரண்டு பகுதிகளிலும் சோப்பு நுரை போன்ற நுரைகள் பொங்கியது. இது, பட்டினப்பாக்கம் முதல் திருவான்மியூர் கடற்கரை வரை காணப்பட்டது. இதையடுத்து, கடந்த 29ம் தேதி மற்றும் 3ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடலில் ஆறு கலக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கடல் நீர் மாதிரியையும், 1 கிமீ தொலைவில் உள்ள கடல்நீர் மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வு முடிவுகளில் கடல்நீரில் நச்சு ஏற்படுத்தக் கூடிய பாஸ்பேட், அம்மோனியா, நைட்ரஜன், டி.டி.எஸ் (TDS), எண்ணெய், க்ரீஸ் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற ரசாயனங்கள் கடல் நீரில் கண்டறியப்பட்டதற்கு காரணம் ஆற்றில் அதிகளவு கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் விடப்பட்டதே முக்கிய காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியும் இந்த நடவடிக்கை தொடருவதாகவும் ஆற்றை ஒட்டி இருக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் கடிதம் எழுதி இருப்பதாக மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.