சென்னை: அ.ம.மு.க கட்சி பதிவுக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன் ஆகியோர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: டிடிவி.தினகரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறி பொதுக்குழுவைக் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல், தனக்குத்தானே பொதுச்செயலாளர் என பிரகடனம் செய்து கொண்டார். தனது விருப்பப்படி நிர்வாகிகளை நியமித்துள்ளார். ஒரு கட்சியை பதிவு செய்ய 100 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த 100 பேரில் பிரமாணப் பத்திரம் அளித்த நான் உள்ளிட்ட 15 பேர் தற்போது கட்சியில் இல்லை என்பதால், இதுதொடர்பாக டிடிவி.தினகரன் அளித்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன்.