அழகுபடுத்தி 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மெரினாவை மாற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: மெரினா கடற்கரையை அழகுபடுத்தி 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து  தெரிவித்துள்ளது.  சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. கலங்கரைவிளக்கத்தில் இருந்து தொடங்கும் லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் மீன் சந்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் ஒழங்குபடுத்தப்பட்டு மீன் சந்தைக்கு மாற்றப்படும் என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரை வணிக பகுதி அல்ல. மக்களுக்கான இடம். மக்கள் ஓய்வுக்காக வந்துபோகும் இடம். மிகவும் அழகான இந்த மெரினா கடற்கரை மாசுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, மெரினா கடற்கரையை அடுத்த 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும். இதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. அதேபோல, கடற்கரை சர்வீஸ்  சாலையை ஒட்டியுள்ள கடைகள் கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் உள்ளன. கடற்கரை மக்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர மறைக்கப்பட்டிருக்க கூடாது. அவற்றை கடற்கரை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டும். அதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்க வேண்டும்.

 லூப் சாலையில் மீன் சந்தை கட்டும்போது அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும். விதிமீறுபவர்களை தேவைபட்டால்  கட்டாயப்படுத்தி அகற்றலாம். கடற்கரையில் உள்ள உணவு கடைகள் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் அவற்றை அகற்ற வேண்டும். எல்லா கடைகளிலும் லைசென்ஸ் பெற்ற அத்தாட்சி கடையின் முகப்பில் லைசென்ஸ் பெற்றவரின் படத்துடன் ஒட்டப்பட வேண்டும்.  லூப் சாலையில் இடதுபுறம் நடைபாதை அமைத்தால் ஆக்கிரமிப்புகள் இருக்காது. இதுகுறித்து மாநகராட்சி முடிவு எடுக்க வேண்டும். மெரினாவை அழகுபடுத்துவதில் மாநகராட்சியுடன் சென்னை போலீசாரும் ஈடுபட வேண்டும்.   கடற்கரை கடைகளை நேர்நிலையாக மாற்றி அமைப்பது குறித்தும், மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்தும் டிசம்பர் 13ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி  பதிலளிக்க வேண்டும். வழக்கு வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: