×

திருமணத்திற்கு மறுத்ததால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக காதலிக்கு மிரட்டல்: காதலனுக்கு போலீஸ் வலை

அம்பத்தூர்: அம்பத்தூரில் திருமணத்திற்கு மறுத்ததால் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி காதலியை மிரட்டிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.அம்பத்தூர், விஜயலட்சுமிபுரம், ஜெகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் சுமதி (25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அம்பத்தூர், பள்ளம் தெருவை சேர்ந்தவர் தீபக் சுவாமிநாதன் (28). இவர், வடபழனியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக நெருங்கி பழகி வந்துள்ளனர். பின்னர், காதலிக்க தொடங்கிய இருவரும் பல்வேறு இடங்களிலும் சுற்றியுள்ளனர். அப்போது, தீபக் சுமதியிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.1.5 லட்சம் வரை வாங்கி உள்ளார். இதனிடையே, தீபக்கின் நடவடிக்கைகள் சரி இல்லாததால், சுமதி அவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி உள்ளார்.

இதனையடுத்து, சமீபத்தில் தீபக், காதலியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சுமதி உனது நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால், உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனை அடுத்து, தீபக் அவரிடம், நாம் இருவரும் பல்வேறு இடங்களில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சுமதி அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் இதுபற்றி புகார் அளித்தார். பின்னர், அவர் புகாரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தீபக் சுவாமிநாதனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : police lover , refusing, social network, publish,boyfriend
× RELATED திருமணத்திற்கு மறுத்ததால்...