×

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு: பிரதமரை சந்தித்த பின் தந்தை குற்றச்சாட்டு

புதுடெல்லி:  சென்னை ஐஐடி.யில் கடந்த மாதம் 9ம் தேதி முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் முக்கிய ஆதாரமாக இருப்பது அவர் செல்போனில் பதிவு செய்யயப்பட்டிருந்த தற்கொலை கடிதம் மட்டும்தான். அதனை கைப்பற்றிய போலீசார், ஆய்வு செய்வதற்காக சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். இதில், பாத்திமாவின் செல்போனில் இருந்த ஆதாரம், மர்மத்தை கிளப்பியது. அதில் மூன்று பேராசிரியர்கள் மீது பாத்திமா குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பாத்திமா தற்கொலை தொடர்பாக அவரது தந்தை அப்துல் லத்தீப் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: எனது மகள் பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி, 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளது.

என் மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து, அதுகுறித்த மனுவை அவரிடம் கொடுத்துள்ளேன்.  அதனை பரிசீலனை செய்த பிரதமர் அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். மேலும் வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என என்னிடம் தெரிவித்தார். இதே கோரிக்கையை தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதும் தெரிவித்துள்ளேன். எனது மகளுக்கு ஏற்பட்ட கொடூரம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. எனது மகள் தற்கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கோட்டூர்புரம் போலீசார் அழித்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : FATIMA ,Fatimah ,student ,suicide ,Madras IIT ,professors ,Chennai , Fatimah, IIT student ,professors,Father ,Prime Minister
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...