காத்மாண்டு: தெற்காசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் கபடி பிரிவில் இந்தியா தனது முதல் போட்டியில் 33 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுநேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் நேற்று ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய இந்திய அணி வீரர்களான கேப்டன் பவன்குமார் ஷெராவத், நவீன் குமார், தீபக் ஹூடா, விஷால் பரத்வாஜ் அமீத் ஹூ டா, சுனில் குமார் ஆகியோரால் புள்ளிகள் எண்ணிக்கை உயர்ந்தன.
அதனால் இந்திய முதல் பாதி முடிவில் 25-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து இந்திய வீரர்கள் வேகம் காட்ட, இலங்கை புள்ளிகள் எடுக்க முடியாமல் திணறியது. எனவே ஆட்ட நேர முடிவில் இந்தியா 49-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப் பெற்றது.தனது முதல் போட்டியில் 33 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்ற இந்தியா இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.