இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி

ஐதராபாத்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெறுகிறது.  கிரன் போலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.  கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிகள் அனைத்தும்  இந்தியாவில் லக்னோ நகரில் நடந்தன.

தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஐதராபாத்தில்  துவங்குகிறது.இத்தொடருக்காக இந்திய அணியின் வீரர்களும் மே.இ.தீவுகள் அணியின் வீரர்களும் நேற்று தனித்தனியாக  தீவிர வலை பயிற்சி மேற்கொண்டனர். மே.இ.தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவரை  கட்டுப்படுத்துவது கடினம்.

அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் முக்கியமானது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய  அணியை, இந்தியாவில் மட்டுமல்ல.. வேறு எந்த நாட்டிலும் எதிர்கொள்வது கடினம்தான். ஆனால் கோஹ்லியை பார்த்து  ஒரேடியாக பயந்து விடாதீர்கள் என்று எங்கள் பவுலர்களிடம் கூறியுள்ளேன். இதற்கு முன்னர் இந்திய அணியுடன்,  இந்தியாவில் ஆடிய ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளோம். அதனால் தைரியமாக ஆடுங்கள் என்று எங்கள் வீரர்கள்  அனைவருக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: