சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.